Banner Wishes

செய்திகள்

Wednesday, September 18, 2013

தமிழைத் தாங்கி வந்த ஐபோனின் புதிய வரவுகள் 5S மற்றும் 5C

பல மாதங்களாக எதிர்பார்த்த, புதிய ஐபோன் 5, சென்ற செப்டம்பர் 10 அன்று, கலிபோர்னியாவில் தன் தலைமை அலுவலகத்தில், ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், ஜப்பான் மற்றும் சீனாவிலும் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. “எதிர்காலத்திற்கான சிந்தனை யோடு, இதுவரை எவரும் தர முடியாத மொபைல் போன் இது” என ஆப்பிள் நிறுவனம் இது பற்றிக் கூறியுள்ளது. ஆனால், தமிழர்களுக்கு இது உண்மையிலேயே இதுவரை எவரும் தராத போனாகத்தான் உள்ளது. 

போனிலேயே தமிழ் உள்ளீடு செய்திடும் செயல்பாடு தரப்பட்டுள்ளது. இதில் இயங்கும் ஐ.ஓ.எஸ் 7 என்னும் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தமிழ் மொழிச் செயல்பாட்டினையும் உள்ளடக்கியாதாக உள்ளது. இது தமிழுக்குப் பெருமையாகும். இது குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.

ஐ போன் 5 எஸ் மற்றும் குறைந்த விலை போனாக ஐபோன் 5சி என இரு மாடல்கள் வெளியாகி உள்ளன. ஐபோன் 5 எஸ், 16, 32 மற்றும் 64 ஜிபி என மூன்று மாடல்களில், தங்கள், வெள்ளி மற்றும் ஸ்பேஸ் கிரே வண்ணங்களில் கிடைக்கும். அமெரிக்காவில், இரண்டாண்டு மொபைல் சேவை நிறுவன ஒப்பந்தத்துடன் இவை 199, 299 மற்றும் 399 டாலர் கட்டணத்தில் கிடைக்கும். நிறுவன ஒப்பந்தம் இல்லாமல், அமெரிக்காவில், 16 ஜிபி போன் 549 டாலர், 32 ஜிபி 649 டாலர் என விலையிடப்பட்டுள்ளது. ஐபோன் 5சி, ஒப்பந்தக் கட்டுப்பாடு இல்லாமல், 549 டாலர் என விலையிடப்பட்டுள்ளது. பட்ஜெட் விலை போன் என்று கூறியதெல்லாம் சும்மா என மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.

மற்ற நாடுகளில் இந்த போன்களின் விலை, இவை சந்தைக்கு வரும்போது தெரியவரும். செப்டம்பர் 20 முதல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளில் இவற்றை வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த போன்களுடன் ஐ.ஓ.எஸ்.7 என்னும் புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, ஆப்பிள் நிறுவனம் வழங்குகிறது. முதன் முதலாக, தன் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. வரும் செப்டம்பர் 18 முதல் இது டவுண்லோட் செய்திடக் கிடைக்கும். ஐபோன் 4, ஐபேட் 2, ஐபேட் மினி, மற்றும் ஐபாட் டச் ஆகியவற்றில் இயங்கும்.


2007 ஆம் ஆண்டு, முதல் ஐபோன் வெளியானது. இதில் இயங்கும் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஐ.ஓ.எஸ்.7 என்ற பெயரில், புதிய வடிவத்தில், நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் தற்@பாது வெளிவருகிறது. தற்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஏழாவது ஜெனரேஷன் என்பதால், இதற்கு ஐ.ஓ.எஸ்.7 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் 200 புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. புதிய பயனாளர் இண்டர்பேஸ், அறிவிப்பு மையம், விரைவாக அணுக்கம் பெற கட்டுப்பாடு மையம் என இதில் பல விஷயங்கள் புதியதாக அறிமுகமாகின்றன. மிகப் பளிச் எனத் தெரியும் வண்ணமயமான இண்டர்பேஸ் இதற்கு சரியான மேக் அப் ஆக தோற்றம் அளிக்கிறது. 


ஐ வொர்க் (iWork productivity suite), ஐ லைப் (iLife), ஐமூவி (iMovie) மற்றும் ஐ போட்டோ (iPhoto) ஆகிய அப்ளிகேஷன்கள், ஐ.ஓ.எஸ்.7 உடன் இணைந்து கிடைக்கின்றன. இவை, இந்த போன்களுக்கு நல்ல விற்பனையைத் தரலாம். ஏனென்றால், இந்த அப்ளிகேஷன்கள் மூலம், போட்டோக்களையும், வீடியோக்களையும் எடிட் செய்திட முடியும். ""இவை ஏற்கனவே மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவை ஆதலால், தற்போது இந்த போன்கள் மூலம் பயன்படுத்த மக்கள் ஆர்வப்படலாம். மேலும் வேறு எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இவை தரப்படுவதில்லை என்பதால், புதிய ஐபோன்களை, இதற்காகவே மக்கள் விரும்புவார்கள்'' என ஆப்பிள் நிறுவனத் தலைமை நிர்வாகி டிம் குக் கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும் கூறுகையில், ""தனக்கென ஒரு தனித்தன்மையையும், அதனையே தனிச் சிறப்பாகவும் பண்பாகவும் ஆப்பிள் எப்போதும் கடைப்பிடித்து வருகிறது. அதனை மாற்றும் எந்த முயற்சிக்கும் நான் சாட்சியாகவும் இருக்க மாட்டேன், அனுமதிக்கவும் மாட்டேன்'' என்று கூறினார். இந்த போன்களைக் காண்கையில் இது முற்றிலும் உண்மை என்பது விளங்கும்.

ஐபோன் 5 எஸ் மொபைல் போனின் சிறப்பம்சங்கள்:




1.ப்ராசசர்: ஏறத்தாழ நூறு கோடி ட்ரான்சிஸ்டர்களுடன் கூடிய 64 பிட் ப்ராசசர் கொண்ட முதல் மொபைல் போனாக ஐபோன் 5 எஸ் வந்துள்ளது.


2. விரல் ரேகை: டச் ஐடி (“Touch ID”) என்று அழைக்கப்படும் இந்த போனில், வெகுகாலமாக எதிர்பார்த்த, விரல் ரேகை அறியும் சென்சார் வசதி தரப்பட்டுள்ளது. பயனாளர்கள், இதனைப் பயன்படுத்தி, போனை இயக்கலாம். இது தேவை இல்லை என்றால், முன்பு போல நான்கு இலக்க பாஸ்வேர்ட் வைத்துக்கொள்ளலாம். அல்லது பாஸ்வேர்ட் இல்லாமலும் பயன்படுத்தலாம்.


3. பேட்டரி: தொடர்ந்து 10 மணி நேரம் 3ஜி இயக்கம் தரக் கூடிய திறன் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 250 மணி நேரம் மின்சக்தியைக் கொடுக்கும். தொடர்ந்து 10 மணி நேரம் வீடியோ பார்க்கலாம்; 40 மணி நேரம் ஆடியோ கேட்டு ரசிக்கலாம்.


4. கேமரா: இதன் ஐ சைட் (iSight) கேமரா 28 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. ஆப்பிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லென்ஸ் இயங்குகிறது. தொடர்ந்து ஒரு விநாடியில் 10 படங்களை எடுக்கும் “burstmode” கிடைக்கிறது. தானாக போகஸ் செய்திடும் வசதி, முகம் அறிந்து இயக்கும் வசதி ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இதன் வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது.


5. இயக்கும் சிப்: இதில் இயங்கும் 64 பிட் ஏ7 சிப், இதற்கு முன் இருந்த ப்ராசசர்களைக் காட்டிலும் 56 மடங்கு வேகமாக இயங்கவல்லது. இதனால், ஐபோன் எஸ்5ல் உள்ள சில அப்ளிகேஷன்கள், ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் இயங்கும். இத்துடன் எம்7 (M7) என்ற பெயரில் சிப் ஒன்றையும், ஆப்பிள் இதில் தருகிறது. இது ஒரு “motion coprocessor”. இது பல அப்ளிகேஷன் புரோகிராம்களின் வேகத்தை அதிகப்படுத்துகிறது.


6. இலவச அப்ளிகேஷன்கள்: இதுவரை கட்டணம் செலுத்திப் பெற்ற Apple’s Pages, Numbers, Keynote, iPhoto, and iMovie apps அப்ளிகேஷன்கள் இதில் இலவசமாகவே இணைத்துத் தரப்படுகின்றன. 


7. வடிவமைப்பு: இதன் பரிமாணங்கள்: 123.8 x58.6 x 7.6 மிமீ. எடை 112 கிராம்.


8. திரை: மல்ட்டி டச் வசதியுடன் 4 அங்குல திரை 1136 x 640 பிக்ஸெல் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 


9. சிம்: இதில் நானோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது பயன்படுத்தப்படும் மைக்ரோ சிம் கார்டுகளைப் பயன்படுத்த முடியாது.


10. மொழிகள்: இதில் தமிழ் உட்பட பல உலக மொழிகளைப் பயன்படுத்தலாம். அதே போல பல மொழிகளுக்கான அகராதிகளும் கிடைக்கின்றன.முன் கூட்டியே சொற்களைத் தரும் predictive text மற்றும் தானாகவே சொற்களைத் திருத்தும் (auto correct) வசதிகள் உள்ளன. 

ஐபோன் 5 சி (iPhone 5C) மொபைல் போன் சிறப்புக்கள் பின்வருமாறு:





1. ஐந்து வண்ணங்களில் இது கிடைக்கிறது.


2. பாலிகார்பனேட் ஷெல் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.


3. சுற்றியுள்ள ஸ்டீல் ஸ்ட்ரக்சர் ஆன்டென்னாவாகச் செயல்படுகிறது.


4. ஏ6 (A6) சிப் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் காம்பஸ், ஜி.பி.எஸ்., வை-பி ஆகிய வசதிகள் உள்ளன.


5. ஐபோன் 5 எஸ் போல, இதிலும் 4 அங்குல திரை டிஸ்பிளே கிடைக்கிறது. ரெசல்யூசன் 1136 x 640 பிக்ஸெல்கள். 


6. கேமரா 8 எம்.பி. திறனுடன் இயங்குகிறது. ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ், ரெடினா டிஸ்பிளே, போட்டோ ஜியோ டேக்கிங் வசதிகள் கிடைக்கின்றன. வீடியோ நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது. 


7. இதன் பரிமாணம் 124.4 x 59.2 x 8.97 மிமீ. எடை 132 கிராம்.


8. இதில் உள்ளாக அமைந்த லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டு, யு.எஸ்.பி மற்றும் பவர் அடாப்டர் வழியே அதனை சார்ஜ் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. தொடர்ந்து 3ஜி அழைப்புகளை 10 மணி நேரம் பயன்படுத்தலாம். வீடியோ 10 மணி நேரமும், ஆடியோ 40 மணி நேரமும் பயன்படுத்தலாம்.
இந்த போன் மக்கள் மனதில் பட்ஜெட் விலை போனாக இடம் பெறுமா என்பது சந்தேகமே. ஆனால், ஆண்ட்ராய்ட் போனால் சரியும் தன் மொபைல் போன் சந்தைப் பங்கினை, இந்த போன் தூக்கி நிறுத்தும் என ஆப்பிள் நிறுவனம் எண்ணுகிறது.





ஆப்பிள் தந்துள்ள இந்த இரண்டு மாடல்களில், மற்ற நிறுவனங்களின் மொபைல் போன்களில் காணப்படும் சில வசதிகள் இல்லை. அவை:


1. அண்மைக் கள தகவல் தொடர்பு எனக் கூறப்படும் Nearfield communications. வருங்காலத்தில் இது பெரிய அளவில் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் இருப்பதால், ஆப்பிள் ஏன் இதனை விட்டுவிட்டது என்று தெரியவில்லை.


2. வயர்லெஸ் சார்ஜிங் தொழில் நுட்பம். ஆப்பிள் தொடர்ந்து இது குறித்து எந்த எண்ணமும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. சாம்சங், எல்.ஜி. மற்றும் நோக்கியா நிறுவனங்கள் இதனைத் தங்களின் சில மாடல்களில் தந்து வருகின்றன. ஒருவேளை, இந்த தொழில் நுட்பம் இன்னும் சீராக வளர்ந்த பிறகு, ஆப்பிள் இதனைத் தன் மாடல் போன்களில் தர திட்டமிட்டிருக்கலாம்.


3. எச்.டி. ஸ்கிரீன்: ஹை டெபனிஷன் திரை தருவதை ஆப்பிள் இந்த மாடல்களிலும் தள்ளிப்போட்டுள்ளது. ஆப்பிள் போன் திரைகளில் காட்டப்படும் டிஸ்பிளே ரெசல்யூசன் இன்னும் பழைய பாணியிலேயே உள்ளது.


4. நம் வசப்படுத்தும் வசதி: இதில் நாமாக மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு மெமரி அதிகப்படுத்த இயலாது. நாமாக புதிய பேட்டரி ஒன்றை இணைக்க முடியாது. மெமரி கார்ட் மற்றும் உபரி பேட்டரியினை வைத்து மொபைல் பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு உண்டு என்றால், ஆப்பிள் போன்களை மறந்துவிடுங்கள். இருப்பினும், இதன் நவீன ப்ராசசர், பல வண்ணங்களில் வடிவமைப்பு ஆகியவை இம்முறை குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்களாகக் கிடைத்துள்ளன.


நன்றி - தினமலர்

No comments:

Post a Comment