Banner Wishes

செய்திகள்

Tuesday, March 26, 2013

சென்னை ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் "OUT"

 "சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், கள பணியாளர்கள் கொண்ட அணிகளை,  போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டோம்" என முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார். 

இதை அடுத்து, இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள்' என, ஐ.பி.எல்., நிர்வாக குழு அறிவித்துள்ளது.


ஈழத் தமிழர்கள் மீது, இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்து, முதல்வர் ஜெயலலிதா, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனால், இலங்கை கால்பந்து வீரர்கள், சென்னையில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டனர். இலங்கை பங்கேற்கும், ஆசிய தடகள போட்டியை, சென்னையில் நடத்த முடியாது எனவும், அறிவிக்கப்பட்டது. "இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கும், காமன்வெல்த் போட்டியில், இந்தியா பங்கேற்கக் கூடாது" என, பிரதமர் மன்மோகனுக்கு, ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த மாதம் துவங்கும், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில், இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்: சென்னையில், ஏப்ரல், 3ம் தேதி துவங்கி, மே, 26ம் தேதி வரை, ஐ.பி.எல்., போட்டிகள் நடக்கின்றன. ஐ.பி.எல்., அணிகளில், இலங்கை வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 


ஈழத் தமிழர்கள் மீது, இலங்கை நடத்திய இன படுகொலையால், தமிழக மக்கள், பெரும் மன வருத்தத்துக்கு ஆளாகி உள்ளனர். போர் குற்ற ஆதாரங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டும் வருகின்றன. இலங்கையின், காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு, இவை சாட்சிகளாக உள்ளன. இலங்கையின், அத்துமீறல்களைக் கண்டித்து, ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், தீக்குளிப்பு போன்ற போராட்டங்கள், தமிழகத்தில் நடந்து வருகின்றன.

 தமிழக மாணவர்கள் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், இலங்கைக்கு எதிராக, தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. பொதுமக்கள் மத்தியில், இலங்கைக்கு எதிரான மனநிலை வலுப்பெற்றுள்ளது. இந்த, நெருக்கடியான சூழலில், இலங்கை வீரர்களை கொண்ட, ஐ.பி.எல்., அணிகள் பங்கேற்கும் போட்டிகள், சென்னையில் நடப்பது, போராட்டங்களை தீவிரப்படுத்தும். 

எனவே, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள் கொண்ட ஐ.பி.எல்., அணிகளை அனுமதிக்க வேண்டாம் என, ஐ.பி.எல்., அணி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இலங்கை வீரர்கள் கொண்ட அணியை சென்னையில் விளையாட அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு கடிதத்தில், ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக முதல்வரின், இந்த அதிரடி அறிவிப்பு, நாடு முழுவதும், நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, காங்., செய்தி தொடர்பாளர், மணீஷ் திவாரி கூறுகையில், ""பிரதமர் வெளிநாடு சென்றுள்ளதால், முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம், பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும். அவர், இந்த விஷயத்தில் முடிவெடுப்பார்,'' என்றார். ஆனாலும், அடுத்த சில மணி நேரத்தில், இந்த விவகாரத்தில், பரபரப்பான திருப்பம் ஏற்பட்டது. நெருக்கடியான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து, ஐ.பி.எல்., நிர்வாக குழு, நேற்று மாலை கூடி, ஆலோசித்தது. 

கூட்டம் முடிந்ததும், ஐ.பி.எல்., தலைவர், ராஜிவ் சுக்லா வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மன்மோகனுக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம் குறித்து, நிர்வாக குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், உள்ளூர் மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயத்துக்கு மதிப்பளித்தும், இலங்கை வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், இந்த விஷயத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், எந்த அணி சார்பிலும், இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள். மாநில அரசு, சில விஷயங்களை தெரிவிக்கும்போது, அதற்கு மதிப்பளித்து, அந்த மாநில அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது அவசியம். அந்த அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு குறித்து, ஐ.பி.எல்., அணிகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி -  தினமலர் (to read original post)

No comments:

Post a Comment